தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று ஆகஸ்ட் 10ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மாணவ, மாணவியர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளிகளுக்கான தேர்வுகளை நடத்துவதில் சிரமங்கள் நீடித்துவந்தது. தற்போது, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர்களுக்கான தேர்ச்சிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
SSLC தேர்வு இல்லை
ஊரடங்கின் காரணமாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்த முடியாத சூழலே நீடித்து வந்தது. இதனால், மாணவர்களின் தேர்ச்சியை எவ்வாறு அறிவிப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. தொடர்ந்து, இறுதித் தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
ஆனால், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தாலும் மாணவர்களின் தேர்ச்சியை அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி கணக்கிடப்படும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்து இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
எத்தனை சதவிகிதம் மதிப்பெண்?
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகிதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவிகிதம் மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது. இதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9,45,006 மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9,39,839 பேரின் முடிவுகள் மட்டுமே இன்று வெளியாகியுள்ளது.
5000 மேற்பட்டோர் தேர்ச்சி இல்லை
இதனிடையே, 10-ம் வகுப்பில் 5,248 மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் குறித்த விவரம் வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை இந்த மாணவர்கள் எழுதாமல் இருந்திருக்கலாம், ஆனால், பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடந்திருந்தால் அவர்கள் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
10ம் வகுப்பு தேர்வில் 5,248 மாணவர்களுக்கான முடிவை வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர். 658 மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு இடையிலேயே நின்று விட்டனர். மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications












