தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொருப்பேற்றதில் இருந்து இன்றுடன் நூறு நாட்கள் நிறைவடைகிறது. கடந்த 100 நாட்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் நாம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக அரசு செய்த நடவடிக்கைகள் குறித்து நாம் ஆராய வேண்டும்.
அவ்வாறு, தமிழக முதலமைச்சர் பொருப்பேற்றதில் இருந்து தற்போது வரையில், கல்வி, வேலை வாய்ப்பு, மாணவர் நலனுக்காக என்ன என்ன திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளது என பார்க்கலாம் வாங்க.
கொரோனா ஊக்கத் தொகை
கொரோனா தாக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே முன்களப் பணியாளர்காக செயல்பட்டு வந்த பத்திரிகை ஊடகவியலாளர்கள் தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மருத்துவத் துறையில் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசு ஏற்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
நீட் தேர்விற்கு எதிராக
புதிதாக முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து நீட் தேர்விற்கு எதிரான குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீட் ஆய்வுக் குழுவுக்கு சட்டப் போராட்டம் மற்றும் நீட் தேர்விற்கு எதிரான ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டது.
பணி மற்றும் நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து, தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக இருந்த 1220 செவிலியர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பயிற்சி மருத்துவர், மேற்படிப்பு மருத்துவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி அறிவிப்பு மற்றும் கல்வித் துறையில் நிரப்பப்படாமல் இருந்து ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஐடிஐ மாணவர்களுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு அதிகரிப்பு
தமிழக வேலை வாய்ப்புகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதாக இருந்த குற்றச்சாட்டு கலையப்பட்டது. தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75 சதவிகிதம் முன்னுரிமை வழங்க ஆணை வெளியிடப்பட்டது. அதோடு விஷன் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின்படி 20 லட்சம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ICF பணியில் வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.
பள்ளிக் கல்வியில் முன்னேற்றம்
தொடர்ந்து, பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் பெயருக்கு பின்னாள் இருந்த சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்டது. அரசுப் பள்ளிகள் நவீன மயமாக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கயும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், கல்வித் தொலைக் காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்லூரிகள் மேம்பாடு
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி கட்டும் திட்டம், தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு அரசு வேலை உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.