சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கு மலை போல விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காலியாகவுள்ள மொத்தம் 813 பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 28-இல் விஏஓ எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, தேர்வுக் கட்டணம் செலுத்திய, கட்டணச் சலுகை கோரிய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் www.tnpscexams.net- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது பயனாளர் குறியீட்டினை (Login ID) டைப் செய்து, விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இணையதளத்தில் தங்களது விவரம் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான விவரத்தினை அதே இணையபக்கத்தில் தோன்றும் படிவத்தை நிரப்பி பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.