சென்னை: வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி அறிவைப் பெருக்குவதற்காக இந்த மடிக்கணினிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் சென்னை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை.
டெண்டரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் டெண்டரில் உள்ள பிரச்னைகள் சீர்செய்யப்பட்டு மடிக்கணின் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேனி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட 15 மாவட்டங்களில் மடிக்கணினி விநியோகம் நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் வாரத்துக்குள் மடிக்கணினிகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
கடந்த நிதியாண்டில் (2014-15) 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.1,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 5 லட்சம் பேருக்கும் டிசம்பருக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
டிசம்பருக்குள் மொத்தமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு விடும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


Click it and Unblock the Notifications












