சென்னை: 10 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் என்ஜினீயரிங் துறையில் பயிற்சி அளித்து மேம்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.
பிரதமரின், பிரதான் மந்த்ரி கௌசல்ய விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தை மனித வள மேம்பாட்டுத்துறை செயல்படுத்த உள்ளதாக அந்தத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பொறியியல் மாணவர்களுக்கு பாடம் மட்டுமல்லாது திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். இதற்காக கல்லூரிகளில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.
நாட்டிலுள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்காக ஏஐசிடிஇ ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 2015-16-ல் 500 கல்லூரிகளிலிருந்து தலா 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் இந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 1,000-மாக உயர்த்தப்படும். அப்போது ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தலா 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அதற்கு அடுத்த ஆண்டில் 2 ஆயிரம் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 100 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.