சென்னை : 2018ம் ஆண்டில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் சமீபகாலமாக பல மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. முதன் முறையாக பொதுத் தேர்வு முடிவுகள் முன்னரே இந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்து வருகிறார். அடுத்த கல்வியாண்டிற்குரிய பொதுத் தேர்வு கால அட்டவணையும் அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளையும் இந்த வருடமே அறிவித்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2018ம் ஆண்டு பொதுத் தேர்வு அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளே நாளைக்குத்தான் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்வுப் பற்றிய அறிவிப்பா என மாணவர்கள், பெற்றோர்கள், அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் எந்தவித மன உளைச்சலும், டென்சனும் இல்லாமல் தேர்வுக்கு தயாராக முடியும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் நாள் மற்றும் முடிவுகள்
2018ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 16 மார்ச் முதல் 20 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 23ந் தேதி வெளியிடப்படும்
2018ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு 7 மார்ச் முதல் 16 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 30ந் தேதி வெளியிடப்படும்
2018ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 1 மார்ச் முதல் 6 ஏப்ரல் வரை நடைபெறும். மேலும் தேர்வு முடிவுகள் மே 16ந் தேதி வெளியிடப்படும்
என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் நேரம்
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு 2.30 மணி நேரம் பொதுத் தேர்வு நடைபெறும்.
12ம் வகுப்பிற்கு 3 மணி நேரம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டிற்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரியில் உணவுக் கட்டணம் உயர்வு
எஸ்சி எஸ்டி எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரிகளின் விடுதி மாத உணவுக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மாத உணவுக்கட்டணம் உயர்த்தப்படுவதால் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 19.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
எஸ்சி எஸ்டி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாத உணவுக்கட்டணம் ரூ. 755ல் இருந்து ரூ. 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்சி எஸ்டி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாத உணவுக்கட்டணம் ரூ. 875ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிக் கல்லூரி விடுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.