சென்னை: பொறியியல் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய 6 நாட்களில் கிட்டதட்ட 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
எஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பம் விற்பனை நடந்து வருகிறது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி உள்ளிட்ட 4 இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
முதல் நாளே 58,600 படிவங்கள் விற்பனையாயின. 2வது நாளில் 22,968 விண்ணப்பங்களும், 3ம் நாளில் 35,397 படிவங்களும் வினியோகிக்கப்பட்டன.
4ம் நாளில் 14,233 விண்ணப்பங்கள், 5-ம் நாளில் 12,687 6ம் நாளான நேற்று மாலை 5 மணி வரை 7,313 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் 29-ந் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் நேற்று முன் தினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
முதல் நாளில் 9,238 படிவங்களும், நேற்று 5,963 விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களிலும் மொத்தம் 15,201 விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளது.
சுகாதாரத்துறையின் இணையதளம் www.tn.health.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.