இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்(வி.எஸ்.எஸ்.சி.,) காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) மத்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி நிறுவனம் ஆகும். கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இதன் தலைமை பணி அலுவலகம் அமைந்துள்ளது. மேலும், இந்த இஸ்ரோ 1969 -ல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் விண்வெளி துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவுக்கு சோம்நாத் தலைவராக உள்ளார்.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது.. இதன் பிரதான நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.
இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது. 1980-ல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகிணி விண்ணில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து செயற்கைக் கோள்களை புவிவட்டச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி.எஸ்.எல்.வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது இஸ்ரோ. இந்த ஏவுகலண்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 விண்கலம் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயான்-2, சந்திரயான்-3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இஸ்ரோ அமைப்பின் கீழ் விக்ரம் சாராபாய் மையம் அமைந்துள்ளது. செயற்கைக்கோள் ஏவு வாகனகளை (Satellite Launch Vehicle) மேம்படுத்தவும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களுக்காகவும் முதன்மையான மையம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகும்.
வானூர்திக்கலை (aeronautics), வான் பயண மின்னணுவியல் (avionics), கூட்டமைப் பொருள்கள் (composites), கணினி, தகவல் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல் (simulations) உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், டிரைவிங் லைசென்ஸ், பணிஅனுபவத்தையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன டிரைவர் பணிக்கு 9 பணியிடங்கள், கனரக வாகன டிரைவர் 9 பணியிடங்கள் என மொத்தம் 18 காலி இடங்கள் உள்ளன.
27.11.2023-ம் தேதியின் அடிப்படையில் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த தேவை இல்லை.
இந்தப் பணியிடங்களுக்கு வரும் 27.11.2023-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும் கூடுதல், விவரங்களுக்கு vssc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












