வெளிநாட்டுப் பல்கலைக்கழக படிப்புகள் என்று சிலர் ஏமாற்றுவதாகவும், அதனால் மாணவர்கள் உஷாராக இருக்கவேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அங்கீகாரம் பெறாமல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் மற்றும் கல்விசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பு கிடைக்கிறது என்பதால் ஏராளமான மாணவர்களை அதைப் பயில ஆசைப்படுகின்றனர். ஆனால் சில பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் பெறாமலேயே படிப்புகளை ஆன்-லைனிலும், நேரிலும் நடத்துகின்றன.
இவ்வாறு பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்பதால் இது போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக உள்ளது.
1956-ம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்ட சட்டரீதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. டெல்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஹைதராபாத், குவாஹாட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.
கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு, இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை ( சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மானியக் குழுவ அமைக்க பரிந்துரை செய்தது. முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்,பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணனை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மானியக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது. 1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மானியக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது.
அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மவுலானா அபுல் காலம் ஆசாத்தால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டத்தை, 1956-ல் இயற்றி முறைப்படுத்தியது
இத்தகைய பெருமைவாய்ந்த யுஜிசி-யின் செயலாளர் மணீஷ் ஜோஷி கூறியதாவது
நமது நாட்டில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வெளிநாட்டு பட்டப் படிப்புகளை வழங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் முறையான அங்கீகாரத்தைப் பெறவில்லை.
இத்தகைய முறையில் பட்டப் படிப்புகளை வழங்க எவ்வித அங்கீகாரமும் யுஜிசி, அந்தக் கல்லூரிகளுக்கு வழங்கவில்லை. இதனால், இவ்வாறு வழங்கப்படும் பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது. எனவே அதை நம்பி மாணவர்கள் ஏமாறக்கூடாது.
இதே போன்று கல்விசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை இணைய வழியில் வழங்கி வருவதாக நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன. இத்தகைய படிப்புகளுக்கு எவ்வித அனுமதியும் யுஜிசி வழங்கவில்லை என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
உரிய ஒழுங்காற்று விதிகளின் அடிப்படையில், இத்தகைய கல்விசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும் பொதுமக்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை ஏமாந்து விட வேண்டாம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை மாணவர்கள் பின்பற்றலாம் என்றும், யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தரும் படிப்புகளைப் படிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












