தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.
தமிழக அரசிற்கு உட்பட்ட ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்.
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வில் பங்கேற்கலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
தற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான னகடைசி தேதி ஏப்ரல் 5ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது.