டிஎன்பிஎஸ்சி குரூப்-1 (TNPSC Group I) முதல்நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முதன்மைத் தேர்வு வரும் மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3ம் தேதியன்று நடைபெற்றது. துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற இத்தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற குரூப்-1 பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீட்டு விதி மற்றும் பணிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்விற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக 3,752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு வரும் மே. 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.