தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது முழுக்க முழுக்க நேரடி நியமனம் ஆகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட தகவல்களைக் காணலாம் வாங்க.
தமிழ்நாடு வனத்துறை:
தமிழ்நாடு வனத்துறையில் சுமார் 320 வனக்காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது இதற்கான அறிவிப்பு www.forests.tn.gov.in என்னும் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் ஊதியம்:
வனக்காவலர் பணிக்கு 227 காலிப் பணியிடங்களும், ஓட்டுநர் பணிக்கு 93 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இரண்டு பணிகளுக்குமே லெவல் 5ன் படி, மாதம் ரூ.18,200 முதல் ரூ.57,900 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
வனக்காவலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் ஒரே விதமான கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிகளுக்கு கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை அறிந்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு:
மேலே குறிப்பிட்ட வனக்காவலர், டிரைவர் ஆகிய இரண்டு பணிகளுமே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில், பொது - 70, பிற்படுத்தப்பட்டோர்-60, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 8, MBC/DT-46, SC-33, SC(A)-7, ST-3., என்ற வகையில் வனக்காவலர் பணிக்கு இடஒதுக்கீடு உள்ளது. இதேப் போன்று ஓட்டுநர் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் - 38, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 2, MBC/DT - 25, SC - 21, SC(A) - 4, ST - 1 என்ற வகையில் வனக்காவலர் பணிக்கு இட ஒதுக்கீடு உள்ளது.
வயது வரம்பு:
01.07.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி, பி.சி உள்ளிட்ட பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
வனக்காவலர், வனக்காவலர் ஓட்டுநர் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை கணினி வழித்தேர்வு மார்ச் 2020-யில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் இறுதியாக 1:3 என்னும் விகிதத்தில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஜனவரி மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்கும். பிப்ரவரி முதல் வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து, விரல்ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:-
வனக் காவலர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 150 ரூபாய் மட்டும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.