தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் இடம் பெறாதநிலையில் புதிதாக இந்தி மொழி சேர்க்கப்பட்டிருப்பது ஆசிரியர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதைப் பதிவு செய்யும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கடந்த 2016ம் வருடம் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரத்தையும் பள்ளி முடிந்து வெளியேறும் நேரத்தையும் பயோமெட்ரிக் கருவி பதிவு செய்யும். வருகை மற்றும் வெளியேற்றத்தைப் பதிவு செய்ய, ஆசிரியர்கள் தங்கள் ஆதார் எண்ணின் கடைசி 8 இலக்கங்களை இந்தக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கு முன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. பின், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் ஈஎம்ஐஎஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் இணையத்தளத்தில் பதியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பல சோதனை முயற்சிகளுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயோமெட்ரிக் கருவிகளில் வருகைப் பதிவு குறித்த விவரங்கள் முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. இந்நிலையில், தற்போது இந்தியிலும் இருக்கின்றன. இதனால் குழப்பம் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டி ஏற்கெனவே இருந்தபடியே மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












