தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக பணியமர்த்தப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்பும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டு 10,018 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 9,353 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு 2,073 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் மருத்துவ சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) வளாகத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைய உள்ளன. விரைவில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












