கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் பயனுக்காக இலவச 2 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு, ஆன்லைன் வழியில் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் போதிய இணைய வசதிகள் இன்றி பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின் வருமாறு;-
''கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 சிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
இஇக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.