இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனும் ஆசையில் உள்ள இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வைத்து வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வயது வரம்பு:
2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். இதில், சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டும், சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய 11 இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு முறை:-
விண்ணப்பதாரர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இற்த முதற்கட்ட தேர்விற்குப் பிறகு ராணுவத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். அதில், வெற்றிகரமாகப் பயிற்சி காலம் முடித்த பிறகு, ராணுவத்தில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்திய இராணுவத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குப் பேரணியில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் பேரணியில் கலந்து கொள்ள முடியாது.