ஜவ்வாது மலை வனத் துறைக்கு உட்பட்ட பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
திருப்பத்தூர் வனக் கோட்டம், ஜவ்வாது மலையில் உள்ள வனத் துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில் தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைத் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட வன அலுவலர், திருப்பத்தூர் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூர் - 635601 வேலூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.