கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 2,215 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் ரயில்வே மருத்துவமனை சார்பில் தற்காலிகமாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக சுகாதாரத் துறையில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்காகத் தற்காலிகமாக 2,215 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக நிரப்பப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகவும், 12ம் வகுப்பில் விலங்கியல், உயிரியல் பாடங்கள் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், ஓராண்டு சுகாதாரப் பணியாளர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தற்காலிக பணி என்று பாராமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.