"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதல்நிலை தேர்வின் ஊக்கத் தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டு தேர்வு குறித்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இத்தேர்வு வாயிலாக, 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு தேர்வுக்கு, ஆக 1 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, https://www.rsanmudhalvan.tn.gov.in என்ற இணையதள இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், "போட்டித் தேர்வுப் பிரிவு" என்ற புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மார்ச் மாதம் துவக்கி வைத்தார்.

ஊக்கத்தொகை எவ்வளவு?
தமிழக இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம், பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பாண்டுக்கான(2023-2024) தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில்,'தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து, உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1000 சிவில் சர்வீஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க, இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது மதிப்பீட்டு தேர்வு
UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை, 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்வாயிலாக, தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ.புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும், இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.rsanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில், விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, ஆக.2 அன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2023
அம்சங்கள் தெரியும்?
"நான் முதல்வன்" திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில், இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது.
இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும்.
அரசுப்பணி ஒன்றையே கனவாகக் கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மத்திய அரசு பணி போட்டித் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பை கணிசமான அளவில் அதிகரித்து வெற்றிபெற செய்வதோடு மட்டுமல்லாமல், கூடிய விரைவில் ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயிலும் வண்ணம் குமரி முதல் இமயம் வரை நம் அறிவை விரிவு செய்ய இத்திட்டம் விசாலப் பாதை வகுக்கும் என்ற நோக்கத்தையும் கொண்டு "நான் முதல்வன்" போட்டித் தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












