தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ந.மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:
மதுரை புதூர் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) தனியார் துறையைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.
முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெறலாம்.
கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 6) காலை 10.30 மணி, தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ஆவது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதேபோல் குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 6) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து அவர்களுடைய நிறுவனங்களுக்கு ஆள்தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் இம்முகாமில், தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது.
கூடுதல் விவரங்களுக்கு 04652-261191, 264191 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நடைபெரும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.