நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் தவிர இதர வகுப்பிற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்துப் பள்ளி மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்மட்டக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 24.3.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் சில மாணவர்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரம் தெரிய வந்தது.
இது எனது கவனத்திற்குக் கொண்டு வந்ததைக் கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று 12ம் வகுப்பு தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்த உத்தரவிட்டேன். இதற்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்.
மேலும், கொரோனா நோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1 முதல் 9 ஆம் வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.