கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுமே மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரசுப் பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் சுழற்றி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதில், 50 சதவிகித ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்களும், அடுத்த 50 சதவிகித ஆசிரியர்கள் அடுத்த 3 நாட்களுக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரும்பாலான ஆசிரியர்கள் ஊரடங்கில் வெளியூர் சென்றுவிட்டதாக கூறி பள்ளிக்கு வர மறுக்கும் நிலையில், அனைத்து ஆசிரியர்களும் 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தவை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.