கொரோனா இரண்டாம் அலையாக தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் வழியில் வகுப்புகள்
இதனிடையே, ஊரடங்கின் காரணத்தால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன் வசதிகள் இல்லாத மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் கல்வித் தொலைக் காட்சி வாயிலாகவும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
பொதுத் தேர்வு நடைபெறுமா?
9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அத்தேர்வு எவ்வாறு நடைபெறும் என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடித்த பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது.
கட்டாயம் தேர்வு நடைபெறும்
இந்நிலையில், நடப்பு ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்படாது!
பொதுத் தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயம் தேர்வு நடத்தப்படும். 12-ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமே தவிர ரத்து செய்யப்படாது என்று தெரிவித்திருந்தார்.
மாதிரி அலகு தேர்வு
இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ்-அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்-அப் குழு
- வாட்ஸ்-அப் செயலியில் மாணவிகளுக்கு தனிக் குழுவும், மாணவர்களுக்கு தனிக் குழுவும் ஏற்படுத்த வேண்டும்.
- இந்த வாட்ஸ்-அப் குழுவில் தனித்தனியாக வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
- மாணவ, மாணவிகள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனி தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, பின் அதை படம் பிடித்து, PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.
- விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
- இந்த வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது.
- ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.