கொரோனா பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மீதமுள்ள தாள்களை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.