ஆர்ஆர்பி எனும் ரயில்வே பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் (RRB) நடைபெற்ற தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் தேதி மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 பிப்ரவரி மாதம் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 35,281 பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், சுமார் 1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 28, 2020 முதல் ஜூலை 31, 2021 வரையில் ஆன்லைன் வழியில் முதல்நிலை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
தற்போது, இந்த முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 2022 ஜனவரி 15ம் தேதியன்று வெளியிடப்படும் என ஆர்ஆர்பி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். இரண்டாம் நிலைத் தேர்வு 2022 பிப்ரவரி 14 முதல் 18ம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வு குறித்த முழுத் தகவலை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.