ஆர்ஆர்பி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடத்திற்கான திறனறிவுத் தேர்வு வரும் 16ம் தேதியன்று நடைபெறவிருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள ஆட்டோ லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான முதல்கட்டத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 9, 2018 முதல் செப்டம்பர் 4, 2018 வரையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்வு கணினி மூலம் ஜனவரி 21, 2019 முதல் ஜனவரி 23, 2019 வரையிலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் குறித்த நேரத்தில் தேர்வை தொடங்கவும், முடிக்கவும் முடியவில்லை. இதனால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 8ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகின.
இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வரும் ஏப்ரல் 16ம் தேதியன்று நடக்கவிருந்த திறனறிவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்ஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், 'ரயில்வே லோகோ பைலட் பணிக்கான திறனறிவுத் தேர்வு ஏப்ரல் 16ம் அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடைபெறாது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.