இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ) காலியாக உள்ள 900-க்கும் மேற்பட்ட பணிகளை நிரப்பிடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்குத் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி:
இந்திய நாட்டின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு opportunities.rbi.org.in என்னும் ஆர்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விபரங்கள்
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு மொத்தம் 926 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 67 காலியிடங்களும், அதிகபட்சமாக மும்பையில் 419 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. பெங்களூருவில் 21 காலியிடங்களும், திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் 20 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:-
ஆர்பிஐ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்து அடிப்படை கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு 1 டிசம்பர் 2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
இட ஒதுக்கீடு:
ஆர்பிஐ வங்கி உதவியாளர் பணிக்கு இட ஒதுக்கீட்டு ரீதியில் குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், சென்னையைப் பொருத்த வரையில் பொதுப்பிரிவினர் - 35, OBC - 15, எஸ்.சி - 11, EWS - 6 என மொத்தம் 67 காலியிடங்கள் உள்ளது.
ஊதியம் :
ரிசர்வ் வங்கி உதவியாளர் பணிக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.14,650 வழங்கப்படும். இது தவிர வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு மையம்:
நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் முதல் நிலைத் தேர்வுக்காக சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
மெயின் தேர்வு
முதல் நிலைத் தேர்வைத் தொடர்ந்து, மெயின் தேர்வு நடைபெறும் போது, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு பாடத்திட்டம்:
எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிழத் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். தமிழக விண்ணப்பதார்கள், சென்னையைத் தேர்ந்தெடுத்து தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம். முதனிலைத் தேர்வானது ஆங்கில மொழி, கணித அறிவு, திறனறிவு என மூன்று தாள்களுக்கு 60 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 100 ஆகும்.
இதே போல், முதன்மைத் தேர்வானது, 200 மதிப்பெண்களுக்கு 135 நிமிடங்கள் நடைபெறும். இதில், திறனறிவு, பொது அறிவு, கணினி அறிவு, கணித அறிவு, ஆங்கில மொழிப் பாடங்களிலிருந்து கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட ஆர்பிஐ உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://opportunities.rbi.org.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து ஜனவரி 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:-
- ஆர்பிஐ உதவியாளர் பணிக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 23 டிசம்பர் 2019
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16 ஜனவரி 2020
- விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 16 ஜனவரி 2020
- முதல் நிலைத் தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : 14, 15 பிப்ரவரி 2020
- மெயின் தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : மார்ச் 2020
முழு விபரங்களை அறிய
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வாய்ப்பு குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












