டோக்யோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அதோடு, இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் சென்று இரண்டு பதக்கங்களை வென்ற முதல் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இன்று நாடே பெருமிதத்தோடு பாராட்டி வரும் பி.வி. சிந்து யார் என இங்கே காணலாம் வாங்க.
பி.வி. சிந்து கடந்த முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியுள்ளார். அதோடு, ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டியில் இருமுறை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
1995 ஜூலை 5ஆம் தேதியன்று பிறந்த சிந்து 2009-ஆம் ஆண்டு சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது 18 வயதில் 2013 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றது அதுவே முதல் முறை ஆகும்.
தொடர்ந்து, 2016 ரியோ ஒலிம்பிக்சில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.
தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.