தமிழகத்தில் உள்ள 14 மருத்துவ பிரிவுகளில் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான 384 இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் உள்ளன. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பின் வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இச்சூழ்நிலையில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்குக் கூடுதலாக 157 இடங்களை ஒதுக்க வேண்டும் என மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது 124 இடங்களை அதிகரிக்க மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகலாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பிற்கான இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:-
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் மட்டுமே முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் உள்ளன. இக்கல்லூரிகளில் செயல்படும் 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களும் வரும் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்புகளாக மாற்றப்பட உள்ளன என்றார்.


Click it and Unblock the Notifications












