ஒடிசா மாநிலத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு வசதியாக மாநில அரசு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்க உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் இந்த ஆன்-லைன் பயிற்சியைப் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் மிகப்பெரிய நுழைவுத்தேர்வு ஆகும்.

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வானது, மத்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவாஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.இதன்படி 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கு இலவச ஆன்-லைன் பயிற்சியை அளிக்கும் வசதியை ஒடிசா அரசு முன்னெடுத்துள்ளது. இந்த பயிற்சியை 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒடிசா அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைக் கல்வி இயக்குநர் ரகுராம் ஆர் ஐயர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒடிசாவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஆன்லைனில் அளிக்கப்படும். எனவே ஸ்மார்ட் வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைவில் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு துறையின் ஒரு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகள் நிதியுதவி பெற்றுள்ளன. இந்த உதவி பெறாத பள்ளிகள் 2 மாற்று திட்டங்களை பயன்படுத்தலாம்.
அதாவது மாணவர்கள் கல்வி மேலாண்மை நடைமுறை கணக்கு அல்லது மேல்நிலைக் கல்வி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம். நிதித் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி, இந்த நிதியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












