மத்திய அரசால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேசிய உர நிறுவனமானது நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (NFL) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மத்திய அரசால் திறம்பட நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாக அமைந்துள்ளது.
2022-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் அரசாங்கத்துக்கு சொந்தமான மிகப்பெரிய யூரியா உர உற்பத்தி செய்யும் நிறுவனமாக தேசிய உர நிறுவனம் அமைந்துள்ளது.

1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவின் முக்கிய உரமான யூரியாவின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக அமைந்துள்ளது.
இந்திய விவசாயிகளின் முதுகெலும்பு போன்று செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ரசாயன உரங்களை தயாரித்து அவர்களுக்கு செவ்வனே வழங்கி வருகிறது.
அம்மோனியா-யூரியா ஆலைகளை பஞ்சாபில் உள்ள நங்கல் மற்றும் பதிண்டா, ஹரியாணாவில் பானிபட், மத்திய பிரதேசத்தின் விஜய்ப்பூரில் (2 ஆலைகளை) அமைத்து செயல்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு தேசிய உர நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
1984 -ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 7,26,000 டன் யூரியா திறன் கொண்ட நாட்டின் முதல் உள்நாட்டு எரிவாயு அடிப்படையிலான உரத் தொழிற்சாலையை செயல்படுத்தும் பொறுப்பை தேசிய உர நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
இந்தத் தொழிற்சாலையில் வணிகரீதியான உற்பத்தி 1988-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கியது.
இதன்பின்னர் விஜய்ப்பூரில் 2-வது ஆலை தொடங்கப்பட்டது. 1997-ம் ஆண்டு இதன் உற்பத்தித் திறன்1.45 மில்லியன் டன்களாக இரட்டிப்பாக்கப்பட்டது.
லாபகரமான செயல்பாடு காரணமாக மத்திய அரசின் மினி-நவரத்னா அந்தஸ்து இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
2001-ஆம் ஆண்டில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை (நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
தேசிய உர நிறுவனத்தின் விஜய்ப்பூர் ஆலையானது, இயற்கைக் குப்பை மாற்றும் வசதியை (Organic Waste Converter - OWC) நிறுவியுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் மக்கும் குப்பை OWC-க்கு எடுத்து செல்லப்பட்டு, அழிக்கமுடியாத பொருள்களிடம் இருந்து தனியாகப் பிரிக்கப்படும். இதனைப் பயன்படுத்த தயார் நிலையில் உள்ள உரமாக மாற்றுவதற்கு 10 நாட்கள் ஆகும்.
தூய்மை இந்தியாவின் ஓர் அங்கமான இந்தத் திட்டம், நகர்ப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் தோட்டக்கலைக் குப்பை உட்பட ஒரு நாளைக்கு 2000 கிலோ மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்து தயார் நிலையில் உள்ள உரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பூங்காக்கள் அல்லது பொது இடங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் உரங்களுக்கு பதில் இந்த உரத்தைப் பயன்படுத்திக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குடியிருப்போர் தங்களின் புல்வெளிகள் மற்றும் சமையல் அறைத் தோட்டங்களிலும் இந்த உரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பெருமைமிகு நிறுவனத்தில் தற்போது 89 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 15, மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 60, எப் & ஏ 10, சட்டம் 4 என மொத்தம் 89 இடங்கள் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ளன.
அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம்., மார்க்கெட்டிங் பிரிவுக்கு எம்.பி.ஏ.,எப் & ஏ பிரிவுக்கு சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., சட்டம் பிரிவுக்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
31.10.2023-ம் தேதி அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் பணிக்கு 18 - 30, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் இளைஞர்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். சென்னை, கொச்சி, ஹைதராபாத் உட்பட 13 இடங்களில் தேர்வுகள் நடைபெறும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக அக்கவுன்ட்ஸ் பணிக்கு ரூ. 200. மற்ற பணிக்கு ரூ. 700-ம் செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள் (1.12.2023) விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு careers.nfl.co.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












