மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பிஇஎம்எல்) பணியாற்றுவதற்கு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. தகுதியான நபர்கள் இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பிஇஎம்எல் நிறுவனமானது பெமல் நிறுவனம் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது. நாட்டில் மிகப்பெரிய மண்வாரி இயந்திரங்களை தயாரித்து பெருமை சேர்த்து வருகிறது இந்நிறுவனம். அதுமட்டுமல்லாமல் மத்திய பாதுகாப்புத்துறை க்குத் தேவையான ஏராளமான வாகனங்கள், ரயில் பெட்டிகளையும் தயாரித்து வருகிறது.
ரயில்வே, போக்குவரத்து, சுரங்கம் போன்ற பல்வேறு கனரக வாகனங்கள், உபகரணங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

மேலும் கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகளுக்கான பெட்டிகளையும் பிஇஎம்எல் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிஇஎம்எல் நிறுவனம் ஆசியாவின் இரண்டாவது பெரிய மண்வாரி இயந்திரங்களை கருவி, வாகனங்களை களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
அதன் பங்குகள் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையில் "BEML" என்ற குறியீட்டின் கீழும், மும்பை பங்குச் சந்தையில் 500048 என்ற குறியீட்டின் கீழும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இதன் மிகப்பெரிய தொழிற்சாலை அமைந்துள்ளது. மேலும் மைசூரு நகரிலும் பெரிய தொழிற்சாலையை அமைத்து ஏராளமான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
அண்மையில் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் இல்லா நவீன ரக மெட்ரோ ரயில்களை தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டது.
மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்காக தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை, பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் வளாகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து பேசினார். நாட்டின் பெருமைமிகு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிஇஎம்எல் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன ரக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களைத் தயாரித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்றும் அவர் பாராட்டினார்.
தற்போது இந்நிறுவனத்தில் 101 காலியிடங்கள் உருவாகி இருப்பதாகவும், இதற்குத் தகுதியான நபர்களை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிஇஎம்எல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேலாளர் பணியிடங்கள் 35, ஆபீஸர் 11, மேனேஜ்மென்ட் டிரெய்னி 21, அஸிஸ்டென்ட் ஜெனரல் மேலாளர் 8, துணை பொது மேலாளர் 8, மேலாளர் 7 உட்பட மொத்தம் 101 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., அல்லது பி.டெக். பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்களுக்கு ஏற்பவும், பிரிவு வாரியாகவும் வயதுத் தகுதி மாறுபடும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அதை பிரின்ட் எடுத்து உரிய நகல் சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை Manager (HR) , Recruitment Cell, BEML Soudha, No 23/1, 4th Main, S R Nagar, Bangalore - 560 027 என்ற முகவரிக்கு அனுப்பித் தரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணபிக்க 20.11.2023 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பங்கள் 25.11.2023-க்குள் வந்து சேரவேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு bemlindia.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












