ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மெயின் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது 2021-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஜேஇஇ மெயின் தேர்வானது வரும் பிப்ரவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது என ரமேஷ் பொக்ரியால் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.