அரசு செவிலியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 11ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
அரசு செவிலியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 11ம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கென, கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவ மனைகளுக்காக தலா 160 செவிலியப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் பல்வேறு காலிப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் செவிலியர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வரும் செவிலியர்கள் தற்போது எந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்களோ அங்கு குறைந்தது ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொண்டு வருவது கட்டாயம். குறிப்பிட்ட சான்று இல்லாதவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.