இந்திய அஞ்சல் துறையில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி முதல் பட்டப் படிப்பு வரை கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அறிவிப்பை இந்திய அஞ்சல்துறை விரைவில் வெளியிடவுள்ளது.
மொத்தம் 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்திய அஞ்சல் துறை என்பது 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் சிறப்பாக செயல்படுகிறது. இது மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் மிகச் சிறப்பான அஞ்சல் சேவை ஆகும். இது கடித சேவை உட்பட பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. தினந்தோறும் இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்துக்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் மிக அதிக அளவில் பயன் பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாக உள்ளது. உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீன நாட்டில் கூட 57 ஆயிரம் தபால் அலுவலகங்கள்தான் உள்ளன. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை ஊழியர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில் போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்ட்மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் என்று மொத்தம் ஐந்து பிரிவுகளில் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் வரை நியமனம் செய்யப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இப்பணிகளுக்கு ரூபாய் 25500 முதல் ரூபாய் 81 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு டிகிரி கல்வி தகுதியாகவும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி ஆகவும், மல்டி டாக்கிங் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












