அஞ்சல் துறையில் பணியாற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை என்பது 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் சிறப்பாக செயல்படுகிறது. இது மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் மிகச் சிறப்பான அஞ்சல் சேவை ஆகும். இது கடித சேவை உட்பட பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. தினந்தோறும் இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்துக்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் மிக அதிக அளவில் பயன் பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.

இந்திய அஞ்சல் துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாக உள்ளது. உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீன நாட்டில் கூட 57 ஆயிரம் தபால் அலுவலகங்கள்தான் உள்ளன. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி (பிரிட்டிஷ் அரசு) முதன்முதலாக 1764 - 1766-களில் பம்பாய், மெட்ராஸ் மற்றும் மேற்கு வங்க மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (12 பைசா) அப்போது வசூலிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக வளர்ந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது அஞ்சல்துறை.
நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையில்தான் தற்போது தபால் உதவியாளர் 598, சார்ட்டிங் அசிஸ்டென்ட் 143, போஸ்ட்மேன் 585, மெயில் கார்டு 3, எம்.டி.எஸ். 570 என மொத்தம் 1,899 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு என 351 இடங்கள் காலியாக உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதியையும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
தபால்துறை உதவியாளர், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, போஸ்ட்மேன் பணிக்கு பிளஸ் 2, எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
9.12.2023-ம் தேதியின் அடிப்படையில் எம்,டி.எஸ். பணிக்கு 18 முதல் 25, மற்ற பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் முறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும்.
மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தேவை இல்லை.
விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும். கூடுதல்
விவரங்களுக்கு dopsportsrecruitment.cept.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












