பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு ஜேஇஇ தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே குஜராத்தில் 45 சதவிகிதம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளனர்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி (நேற்று) முதல் தொடங்கி, வரும் 6ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் இருந்து 660 மையங்களில் 9 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
ஜேஇஇ நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1ம் தேதியன்று இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், இளங்கலைக் கட்டிடவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு காலை 9 முதல் 12 மணி வரையில் நடைபெற்றது. இதற்கு 1,38,409 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மதியம் 3 முதல் 6 மணி வரை பி.ப்ளானிங் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. இதற்கு 59,003 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 32 தேர்வு மையங்களில் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. முதல் நாள் தேர்விற்கு 3,020 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 1,664 மாணவர்கள் அதாவது 55 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 1,356 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.