உயர் கல்வி நிறுவனங்களின் 2022ம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் (NIRF) ஜூலை 15ல் வெளியாகியது.
அதில், பாரம்பரியம் கொண்ட ஐஐடி மெட்ராஸ், ஒட்டு மொத்த நாட்டின் சிறந்த கல்லூரியாக தேர்வாகி, மீண்டும் முதல் இடத்தைத் தக்கவைத்தது.
முதல் இடத்தை பிடிக்கிறது என்பது அவ்வளது எளிது? என்ன கைஸ்...
பர்ஸ்ட் இடத்தை பிடிச்சது மட்டுமின்றி, கேம்பஸ் இன்டர்வியூல அதிக வேலைவாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது.
கேம்பஸ் இன்டர்வியூ என அழைக்கப்படும் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பணி நியமனங்களை, ஐஐடி., சென்னை கிடைக்கச் செய்துள்ளது.
380 நிறுவனங்கள்
2021-22ம் கல்வியாண்டில் இரண்டு கட்ட வளாக வேலைவாய்ப்புகள் மூலம் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன.கோடைக்கால உள்ளகப் பயிற்சியின் (Summer Internship) வாயிலாகக் கிடைத்த 231 முன்வேலைவாய்ப்புகளுடன் (PPOs) சேர்த்து, மொத்தத்தில் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில், இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும், இதில் அடங்கும். இந்த எண்ணிக்கையும் கூட சாதனை அளவாகும். தவிர, 131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின்போது, 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
100 சதவீத பிளேஸ்மெண்ட்
நடப்பு ஆண்டில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.
ரூ.21.48 லட்சம்
2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பளம் ஆண்டுக்கு, ரூ. 21.48 லட்சம் ஆகும். பெறப்பட்ட அதிகபட்ச சம்பளம் டாலர்(USD) 250,000 ஆகும்.
2021-22ம் ஆண்டில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்தவர்களில், 80 விழுக்காடு மாணவர்கள், 2021-22ம் ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களைப் பெற்றுள்ளனர்.
முக்கிய காரணம் என்ன?
ஐஐடி மெட்ராஸ் ஆலோசகரும் (பணியமர்த்தல்) வெளியேறும் பேராசிரியருமான சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், "கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் மதிப்புக் கூட்டல் விளைவுகளை, அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்தான் பிரதிபலிக்கின்றன.
2021-22ம் ஆண்டில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது.
ஐஐடி மெட்ராஸ்-ல் மாணவர்களுக்கு அளிக்கப்படும் மிகக் சிறந்த பாடப்பயிற்சி, இணைப் பாடப்பயிற்சி வாய்ப்புகளுக்கு இது சான்றாக விளங்குகிறது. நடப்பாண்டில் வெற்றிகரமாக மாற்றிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், பணிநியமனங்கள் உள்ளிட்ட இதரப் பணிகளில் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
எங்கள் கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் குழுவினருக்கும், இந்த முயற்சிகளுக்கு இடைவிடாத ஆதரவை நல்கிவரும் நிர்வாகத்திற்கும் எனது நன்றி" என்றார்.
முதல்கட்டத்தில் மொத்தம் 45 சர்வதேசப் பணிநியமனங்கள் கிடைத்துள்ளன. இதில் 11 இடங்களை ரகுடேன் மொபைல் (Rakuten Mobile) நிறுவனம் வழங்கியுள்ளது.
க்ளீன், மைக்ரான் டெக்னாலஜிஸ், ஹோண்டா ஆர்&டி., கொஹெஸ்டி, டா வின்சி டெரிவேட்டிவ்ஸ், அக்சென்டர் ஜப்பான், ஹிலாப்ஸ் இன்க்., க்வாண்ட்பாக்ஸ் ரிசர்ச், மீடியாடெக், மணி ஃபார்வர்டு, ரூபிக், டெர்ம்கிகரிட், ஊபர் போன்ற சர்வதேச நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
கல்வி கற்க வேண்டிய நேரத்தில், அதை சரியாக செய்தால் வாழ்வில் பின் பகுதியில் கூலா இருக்கலாம் என்பதை நீங்க மறக்காதீங்க... அதற்கு இந்த கேம்பஸ் இன்டர்வியூ ரெக்கார்டு ஒரு உதாரணம்.