வி.ஏ.ஓ., எனும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய 11 வகையான பணிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 'குரூப்-4' தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.
ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசு பணி என்பதால், இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

அந்தவரிசையில், தமிழ்நாடு அரசு துறைகளில், 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 'குரூப்-4' தேர்வு அறிவிப்பு, மார்ச்.30 அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை 24ல் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இந்த தேர்வு, 7,689 மையங்களில் நடந்தது.
இத்தேர்வில் பங்கேற்க, 22 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வின் வாயிலாக, கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 என, மொத்தம் 7301 இடங்கள், இந்தத் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
இந்தநிலையில், இம்மாதம் 21ல் குரூப் 4 பணியிடங்கள் 7,301லிருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் 274இல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் 3593இல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,108இல் இருந்து 3,311 ஆகவும் அதிகரிக்கப்பட்டன.
முடிவுகள் தாமதம்
தேர்வு முடிவுகள், கடந்தாண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என, அறிவிப்பு வெளியானது. பின், தேர்வு முடிவுகள் தாமதமான நிலையில், நிகழாண்டு பிப்ரவரியில் முடிவுகள் வெளியாகும் என, அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அறிவித்தது.
மார்ச் மாதத்தில், ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆக்காமல், குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும் என, தேர்வர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.
#WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக், மார்ச் 8ல் தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், எட்டு மாதங்கள் கழித்து, நேற்று குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
எண்ணிக்கை அதிகம்
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், குரூப் 4 தேர்வில் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.
how to check Results
விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்ணை சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இன வாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர், தேர்வு அட்டவணை உரிய நேரத்தில், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
எனவே, தேர்வர்கள் தங்களது வயது, வயது தளர்வு, பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், இட ஒதுக்கீடு, உடல் குறைபாடு (பொருந்தினால்), தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் (பொருந்தினால்) போன்றவை தொடர்பான அசல் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஆல் தி பெஸ்ட்... அரசு ஊழியர்களே...!


Click it and Unblock the Notifications












