எந்த வேலையும் செய்யாமல் எந்நேரமும் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை சோம்பேறி என திட்டுவதை நாம் பார்த்துள்ளோம். ஏன் நாமே பல நேரம் அந்த திட்டை வாங்கியிருப்போம். ஆனால் தூங்குவதையே வேலையாக்கி அவர்களுக்கு கை நிறைய சம்பளம் கொடுக்கிறது ஒரு நிறுவனம்.
நம்ப முடியவில்லையா? அட ஆமாங்க, பெங்களூரில் செயல்பட்டு வரும் வேக்ஃபிட் என்னும் நிறுவனம் ஒன்று 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' என்ற புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தூங்குவதற்காக ரூ .1 லட்சம் சம்பளம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளது.
தூக்கம்
சிறு பருவத்தில் பள்ளி வகுப்பறை தொடங்கி, அலுவலகத்தில் பணிபுரிவது வரை நம் கூடவே பயணிப்பது தூங்கும் பழக்கமும். இன்றைய இயந்திர மயமாக்கப்பட்ட உலகில், மனிதர்களும் இயந்திரத்தனமாகவே உழைத்து வருகின்றனர். நேரம், காலம் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமலும் பணிகளை செய்து வருவதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எவ்வளவு அவசியம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதியன்று உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. வரும் ஆண்டு தூக்க தினத்தை முன்னிட்டு, Join the sleep world preserve your rhythms to enjoy life (உங்களுடைய வாழ்க்கையை இசை லயம் கெடாமல் அனுபவிக்க தூக்க உலகில் இணைந்துகொள்ளுங்கள்') என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி தூங்க வேண்டும்?
ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இன்றைய தலைமுறையினர் எப்படி தூங்க வேண்டும், எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரியாமலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையை தொலைக்கும் தூக்கம்
வளர்ந்து வரும் நவீன யுகத்தில் பெரும்பாலோர், வேலை செய்யும் இடங்களிலேயே தூங்கி வழிவதும், தொடர் இரவு பணியின் காரணமாக தங்களது வாழ்க்கையை தொலைத்து, உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார நிறுவனம், இன்றைய தலைமுறையினருக்கு உறக்கம் என்பதே கனவாகிப் போகும் நிலை உருவாகிவிட்டதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
வயதிற்கு ஏற்ற தூக்கம்
ஒவ்வொருவரும் அவர்களது வயதுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு தூங்க வேண்டும். அதற்கான பட்டியல் இதோ...
- பச்சிளம் குழந்தைகள் - 16 முதல் 20 மணி நேரம்.
- பதின்பருவத்தினர் - 9 முதல் 10 மணி நேரம்.
- இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் - 7 முதல் 10 மணி நேரம்.
- முதியவர்கள் - 8 முதல் 12 மணிநேரம்.
மிக மிக அவசியம்
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமான, அத்தியாவசியமான ஒன்றாகும். நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்வதற்கும் இது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
தூங்குவதற்கு ரூ.1,00,000 சம்பளம்
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் வேக்ஃபிட் (Wakefit) என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' என்ற புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தூங்குவதற்காக ரூ .1 லட்சம் சம்பளம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினசரி 9 மணி நேரம்
வேக்ஃபிட் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த தூங்கும் பணிக்கு சேருபவர்கள், தினசரி 9 மணி நேரம் சரியான முறையில் தூங்க வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் என தொடர்ந்து 100 நாட்கள் தினசரி 9 மணி நேரம் சரியான முறையில் தூங்கி எழுந்தால், அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் கட்டணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
sleep internship 2020 batch
இதற்கான அறிவிப்பை வேக்ஃபிட் நிறுவனம் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதோடு, விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் வரும் 2020ம் ஆண்டு பேட்ஜில் ("sleep internship 2020 batch") சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
வாழ்க்கையில் முன்னுரிமையே தூக்கம்
இதுகுறித்து வேக்ஃபிட்.கோவின் இயக்குநரும், இணை நிறுவனருமான சைதன்யா ராம லிங்க கவுடா கூகையில், இன்றைய இளைஞர்களிடையே தூக்கத்தை தங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை ஆக்குவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளோம். அதன் காரணமாகவே, நாட்டின் சிறந்த ஸ்லீப்பர்களை நியமிக்க முயற்சி செய்கிறோம், அதற்காக ஸ்லீப் இன்டர்ன்ஷிப் அறிவிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தூக்கத்தின் ஆரோக்கியம்
இன்றைய இளைஞர்கள் தூக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், மக்களிடையே மீண்டும் தூக்க ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது ஒரு முன்முயற்சியே. இந்த முயற்சி தூக்கத்தை நம் வாழ்வில் வேலை மற்றும் வாழ்வின் சமநிலையைப் பராமரிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான மற்றொரு படியாகும் என தெரிவித்துள்ளார்.
பைஜாமா அணிந்துதான் தூங்கனும்
மேலும், இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு தூங்குவதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளது. இதில் பங்கேற்பவர் பைஜாமா அணிந்துதான் தூங்க வேண்டும். மேலும், நிறுவனம் பயிற்சியாளர்களின் தூக்க முறைகளை கண்காணிக்கும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன், பயிற்சியாளர்களின் தூக்க அனுபவங்களை கண்காணிக்க இதுபோன்ற நிபந்தனைகள் உதவும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.1 லட்சத்துடன் தூங்க ரெடியா?
ஒன்பது மணி நேரம், 100 நாட்கள் பஞ்சு மெத்தை, குளுகுளு ஏசியில் தூங்குவதுதான் உங்களுடைய வேலை. இதற்கு தூங்குவதில் ஆசை, ஆர்வம், காதல் என போன்ற தகுதிகள் உங்களிடம் இருந்தாலே போதும். நீங்கதான் லட்சாதிபதி.