உயர் கல்வியை எட்டும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை என்பது குறைவு. அதற்கு பொருளாதாரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரம் என்ற ஒன்றால், உயர் கல்வியை எட்ட முடியாத மாணவ, மாணவிகளுக்கு என, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. மாநில அரசின் கல்வி உதவித்தொகை குறித்து அறியும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிந்து வைத்திருப்பது இல்லை.
மத்திய கல்வி அமைச்சகம், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்குகிறது. அதாவது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறும் வகையில், பி.எம்.- யு.எஸ்.பி., யோஜனா திட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த உதவித்தொகை மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
எந்தெந்த படிப்புகள்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கும், உதவித்தொகை திட்டம் பொருந்தும்.
தகுதிகள் தெரியும்?
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப மொத்த ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருத்தல் அவசியம்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 82 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
எவ்வளவு உதவித்தொகை
தேர்வு செய்யப்படும் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா 12 ஆயிரம் ரூபாய், முதுநிலை பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு, 4ம் மற்றும் 5ம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு, இறுதி ஆண்டில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இருப்பினும், கல்வி உதவித்தொகை குறித்த கூடுதல் விபரங்களுக்கு, கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விரிவாக அறிந்து கொள்ளலாம். கல்வி உதவித் தொகை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால்,
'helpdesk[at]nsp[dot]gov[dot]in என்ற மின்னஞ்சல் அல்லது 0120 - 6619540 என்ற தொலைபேசி எண் வாயிலாக, விடுமுறை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு, தங்கள் சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












