இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் (சிட்பி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) என்பது இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த உரிமம் மற்றும் ஒழுங்குமுறைக்கான உச்ச ஒழுங்குமுறை அமைப்பாக அமைந்துள்ளது.
இது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிட்பி வங்கியின் அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு நகரங்களில் கிளைகளைப் பரப்பி செவ்வனே செயல்பட்டு வருகிறது இந்த வங்கி.

ஐடிபிஐ வங்கியின் துணை நிறுவனமாக மத்திய அரசால் ஏப்ரல் 2, 1990 அன்று சிட்பி வங்கி நிறுவப்பட்டது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மறுநிதியளிப்பு வசதிகளை வழங்குதல், தொழில்களுக்கு காலக் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன நிதியில் ஈடுபடுதல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையில் முதன்மை நிதி நிறுவனமாக செயல்படுதல் ஆகிய பணிகளை சிட்பி செய்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது சிட்பி வங்கி.
தற்போது சிட்பி வங்கியில் உதவி மேலாளர் (அசிஸ்டென்ட் மேனேஜர்) பிரிவில் 50 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு (60 சதவீத மதிப்பெணக்ள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 55 சதவீத மதிப்பெண்) அல்லது சிஏ, சிஎஸ், சிடபிள்யூஏ, சிஎஃப்ஏ, சிஎம்ஏ அல்லது பி.எல், பி.இ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோரின் வயது 8.11.2023-ம் தேதி அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தப் பணியிடங்களில் சேர முக்கிய தகுதியான அனுபவத்தையும் சிட்பி வங்கி எதிர்பார்க்கிறது. வங்கிப் பணிகளில் குறைந்தது இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். சம்பளம் உத்தேசமாக ரூ.90 ஆயிரம் (மாதத்துக்கு) வழங்கப்படும்.
தேர்வுக்கான நகரங்களாக லக்னோ, மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் மட்டுமே குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும்.
இந்த வேலை இடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,100 இளைஞர்கள் செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 175 மட்டுமே செலுத்தினால் போதுமானது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய கடைசிநாளாக 28.11.2023-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களைப் பெற sidbi.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவேண்டும்.


Click it and Unblock the Notifications












