ரயில்டெல் நிறுவனம் என்று அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் உதவி மேலாளர் உட்பட பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வரும் 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில் டெல் நிறுவனமானது, நாட்டில் செயல்பட்டு வரும் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்டெல் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (RailTel Corporation of India Ltd) என்ற நிறுவனமானது பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்கும் ஒரு மிகச் சிறந்த இந்திய பொதுத்துறை நிறுவனமாக விளங்குகிறது.

நாடு முழுவதும் பிராட்பேண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மல்ட்டிமீடியா நெட்வொர்க்கை உருவாக்குதல் மற்றும் இந்திய ரயில்வேயின் ரயில் கட்டுப்பாட்டு செயல்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டது.
ரயில்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள 5,000 நிலையங்கள் வழியாக அனைத்து முக்கிய வணிக மையங்களையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வேயானது, தொடக்கத்தில் தொலைத்தொடர்புத் துறையை (தற்போது பிஎஸ்என்எல்) தங்கள் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத் தொடர்புச் சுற்றுகளுக்கு சார்ந்திருந்தது. இந்நிலையில் தனது சர்க்யூட் செயல்திறனை அதிகரிக்க, ரயில்வே தனது சொந்த தகவல் தொடர்பு அமைப்புகளை 1970 களின் முற்பகுதியில் இருந்து மேல்நிலை தொலைபேசி இணைப்புகள், குவாட் கேபிள்கள் மற்றும் மைக்ரோவேவ் சிக்னலிங் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கத் தொடங்கியது. 1983-ம் ஆண்டில், ரயில்வே சீர்திருத்தக் குழு, ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) அடிப்படையிலான தகவல்தொடர்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து மத்திய தகவல் தொடர்பு துறையிலிருந்து சுதந்திரமான அமைப்பை உருவாக்கும் பொருட்டு ரயில்டெல் நிறுவனம் தொடங்கப்பட்டது.
தற்போது இந்த நிறுவனத்தில்தான் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அசிஸ்டென்ட் மேனேஜர் (உதவி மேலாளர்) பிரிவில் டெக்னிக்கல் 26, நிதி 6, எச்.ஆர்., 7, துணை மேனேஜர் பிரிவில் டெக்னிக்கல் 27, மார்க்கெட்டிங் 15 என மொத்தம் 81 காலி இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அசிஸ்டெண்ட் மேனேஜர் டெக்னிக்கல் டிப்ளமோ, துணை மேனேஜர் வேலை இடங்களுக்கு பி.இ., / பி.டெக். படித்திருக்க வேண்டும். மற்ற பிரிவில் உள்ள வேலையிடங்களில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வரும் 11.11.2023 அடிப்படையில் துணை மேனேஜர் பணிக்கு 21 - 30, மற்ற பணிகளுக்கு 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் உள்ளது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1200 செலுத்த வேண்டும்.. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 600 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி நாள் வரும் 11-ம் தேதி (11.11.2023) ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு railtelindia.com என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
விருப்பமுள்ள மாணவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications












