கொரோனா பதிப்பின் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டு பலர் வேலையிழந்துள்ள நிலையில், 1,25,000 தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில், இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அமேசான் ஆன்லைன் வர்த்தகம்
2004-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது வேவையை தொடங்கியது. தற்போது, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள்
அதுமட்டுமின்றி, அமேசான் தனது சொந்த நாட்டை விட இந்தியாவில் தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் வீழ்ந்த வர்த்தகம்
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனாவின் காரணமாக ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து சேவை, உற்பத்தி என அனைத்துமே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் சேவை
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் டெலிவரி சேவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவையில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. சுமார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆன்லைன் டெலிவரி சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்களும் அதிகமாக ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். எனவே டோர் டெலிவரி மற்றும் இதர சேவைகளுக்கு பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அமேசான் நிறுவனம் அதிகமான ஆட்களை பணியில் அமர்த்த முடிவுசெய்துள்ளது.
50,000 தற்காலிக பணியாளர்கள்
அதன்படி, இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் அதிக முதலீடு செய்து வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்ப்பதில் மும்முரமாகச் செயல்படும் அமேசான் நிறுவனம், தற்போது, ஊரடங்கு காலத்தில் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை விட சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அமேசானின் அதிரடி அறிவிப்பு!
இதனிடையே, அமேசானில் தற்காலிகமாக பணியாற்றும் 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், அமேசானின் இந்த அறிவிப்பு பலரால் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆன்லைன் சேவை அதிகரிப்பு
கொரோனா பாதிப்பால் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆன்லைன் சேவைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்த நிலையில், அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக லட்சக்கணக்கான தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அனைத்து விதமான பொருட்களும் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதனால் ஆன்லைன் விற்பனை சேவை அதிகரித்து வருகிறது.
1,25,000 ஊழியர்களுக்கு நிரந்தர வேலை!
இந்நிலையில், இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆன்லைன் சேவையின் தேவை அதிகரித்துள்ளதாலும், பலர் வேலைவாய்ப்பை இழந்து வருவதாலும் 1,25,000 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications












