பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் லட்சத்தீவு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மேலும் அதிக அளவில் முதலீடு குவியவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் இங்கு வேலைவாய்ப்பு பெருகும் என்பதால் அப்பகுதி இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த வாரம் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு வருகை தந்தார். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையின் பின்னணியில் அவர் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாயின. இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்து விட்டதாம். இதையடுத்து அங்கு புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயன்று வருகிறது.
மேலும் அங்கு புதிய நட்சத்திர ஓட்டல்களை கட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தற்போது கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. வேறு எந்த நகரிலிருந்தும் லட்சத்தீவின் எந்த ஒரு பகுதிக்கும் விமான சேவை இயக்கப்படவில்லை. அதுவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை (ஏடிஆர்-72) இயக்கி வருகிறது.

கொச்சி-அகத்தி, அகத்தி-கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்படுகிறது.
பிரதமர் வருகைக்குப் பின்னர், இந்திய சுற்றுலாப்ப யணிகள் லட்சத்தீவை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரையில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கூடுதல் விமானங்களை இயக்குவது குறித்து அலையன்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
தற்போது புதிதாக ஓட்டல்களை அமைக்கவும் டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் டாடா நிறுவனம் 2 சொகுசு விடுதிகளையும் (ரெசார்ட்டுகள்) அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ரெசார்ட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதனால் அங்குள்ள வேலையில்லாத இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். புதிய ஓட்டல்கள், நிறுவனங்கள் அமைக்கும்போது அங்குள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும். அவர்களது வாழ்க்கைத் தரமும் பெருகும்.
புதிய விமான நிலையம் குறித்து லட்சத்தீவு நிர்வாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் கிரி சங்கர் கூறும்போது, "அகத்தியில் இப்போது உள்ள விமான நிலைய ஓடுபாதை சிறியதாக உள்ளது. ஏர்பஸ் 320 உட்பட பெரிய விமானங்களும் தரையிறங்க ஏதுவாக அதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, மினிகாய் தீவில் ஏர்பஸ் 320 மற்றும் போயிங் 737 ரக விமானங்கள் வந்து செல்வதற்காக புதிய பசுமை விமான நிலையம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும். மேலும் இந்த விமான நிலையம் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் கட்டப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி லட்சத்தீவின் பங்காராம் தீவில் உள்ள ரிசாட்களில் 32 சொகுசு தங்கும் அறைகள் இருந்தன. இது இப்போது 64 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சுஹேலி மற்றும் கமாட் தீவுகளிலும் நவீன வசதிகள் கொண்ட ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களை கட்ட பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுதவிர, அகத்தி மற்றும் கவரட்டி தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான கூடாரங்களை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தரவுள்ளதால் இப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டி, வாகனச் சேவை என பல்வேறு துறையிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications












