இந்திய விமான நிலைய ஆணைய நிறுவனமான கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் (AAICLAS) பணியாற்ற அருமையான வாய்ப்பு வந்துள்ளது. இங்கு ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஏஏஐசிஎல்ஏஎஸ் (ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அன்ட் அலைடு சர்வீஸ் கம்பெனி லிமிடெட்) முழுக்க முழுக்க இந்திய விமான நிலைய ஆணையத்தின்(ஏஏஐ) துணை நிறுவனமாகும்.
இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள குடியியல் விமான நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய மத்திய அரசு நிறுவனமாகும்.

இந்த அமைப்பு நாட்டிலுள்ள 125 விமான நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 சர்வதேச விமான நிலையங்களும் 8 சுங்கச்சாவடி உள்ள விமான நிலையங்களும் 81 உள்ளூர் விமான நிலையங்களும் பாதுகாப்பு துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 விமான நிலையங்களும் அடக்கமாகும்.
இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான் வழிப் பயணத்துக்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனமாக ஏஏஐ அமைந்துள்ளது. இந்த ஏஏஐ நிறுவனத்தின் கீழ்தான் ஏஏஐசிஎல்எஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது, 11 ஆகஸ்ட் 2016-ம் தேதி இந்திய விமான நிலைய ஆணையத்தின் 100 சதவீத துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது. பொருளாதார ஏற்றம், ஏர் கார்கோவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏஏஐசிஎல்ஏஎஸ் நிறுவனமானது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து ஒரு தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இது தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பெருமை வாய்ந்த நிறுவனத்தில் தற்போது செக்யூரிட்டி ஸ்கிரீனர் பிரிவில் 906 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினர் 55% மதிப்பெண்கள் வைத்திருந்தால் போதுமானது) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மேலும் வயதுத் தகுதியாக 1.11.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணியிங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, கொல்கத்தா வாரணாசி உட்பட 23 இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
தேர்ச்சி முறையானது கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் அமைந்திருக்கும்.
இந்தப் ணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 100 மட்டும் செலுத்தினாலே போதுமானது.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு டிசம்பர் 8-ம் தேதி கடைசி நாளாக( 8.12.2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களை பெற விரும்பும் நபர்கள் aaiclas.aero என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












