தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக, அதற்கு கூடுதல் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 24 வரையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. பள்ளித் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட இத்தேர்வில் கொரோனா அச்சத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மேலும், தேர்வுகள் முடிவுற்ற நிலையிலும் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, காரோனா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் சில மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியது.
இதனிடையே, 12ம் வகுப்பு வேதியல் பாடத்தில் ஒரு கேள்வியைத் தமிழாக்கம் செய்வதில் பிழை இருந்துள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி தேர்வுத்துறை, சம்பந்தப்பட்ட கேள்விக்காக மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.