10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பல்வேறுகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் 2020-21ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் அனைவரும் தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி சேரும் மாணவர்களின் சேர்க்கையின் போது, அவர்களது 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த அரசு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.gov.in என்ற அரசு இணையத்தளத்திலிருந்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விபரங்களைச் சரியாக பதிவிட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தில் 31.08.2021 தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.