சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு பிப்ரவரி 14-க்குப் பதிலாக வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலியிடங்கள் தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் அறிவித்தது.
அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதியும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.