மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2019-ம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு இத்தேர்வு நடைபெற்றது. இதனிடையே, கொரோனா ஊரடங்கின் காரணமாக தேர்வு முடிவுகளை தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று இத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
யுபிஎஸ்சி-யின் சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர் குறைந்து இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
கடந்த 2019 ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் 2019 மாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் நேர்காணல் நடத்தப்பட்டது.
தற்போது, இத்தேர்விற்கான முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 011- 23385271 / 23381125 / 23098543 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 927 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றதில், 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், இட ஒதுக்கீட்டின் படி பொதுப் பிரிவினர் 304, ஓபிசி 251, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 78, எஸ்சி 129, எஸ்டி 67 பேர் என மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே, யுபிஎஸ்சி 2019 சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவிலேயே தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார் பாஸ்கர் 7-ம் இடத்தைப் பெற்றுள்ளார்.